
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்
TNPSC, Chennai.
சான்றிதழை ஸ்கேன்
செய்து பதிவேற்றம் செய்யும் புதிய முறை டிஎன்பிஎஸ்சி குரூப்-2 ஏ தேர்வில்
அறிமுகமாகிறது
அசல் சான்றிதழ்களை ஸ்கேன் செய்து ஆன்லைனில் பதிவேற்றம் செய்யும்
புதிய முறையை (TNPSC Group – 2A) குருப்-2-ஏ தேர்வில்
டிஎன்பிஎஸ்சி முதல்முறையாக அறிமுகப்படுத்துகிறது. இது தொடர்பாக TNPSC தேர்வு
கட்டுப்பாட்டு அதிகாரி இரா.சுதன் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில்
கூறியிருப்பதாவது:
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) தனது பல்வேறு
செயல்பாடுகளில் துரித மற்றும் வெளிப்படைத் தன்மையை உறுதிசெய்யும் பொருட்டு, தகவல் தொழில்நுட்ப
உதவியுடன், விண்ணப்பதாரர்கள் பயன்பெறும் வகையில் அவ்வப்போது புதிய
நடைமுறைகளை அறிமுகப்படுத்தி வருகிறது. தற்போதுள்ள நடைமுறையில் சான்றிதழ்
சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வுக்காக தரவரிசைப்படி தெரிவு செய்யப்படும்
விண்ணப்பதாரர்கள் 2 முறை சென்னையில் உள்ள தேர்வாணைய அலுவலகம் வந்து செல்ல வேண்டியுள்ளது. இதனால், தேர்வர்களுக்கு
ஏற்படும் பண விரயம் மற்றும் காலவிரயத்தை வெகுவாகக் குறைக்கும் வகையில் சான்றிதழ்
சரிபார்ப்புக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள
விண்ணப்பதாரர்கள் அனைவரும், தங்களது இணையவழி
விண்ணப்பத்தில் கோரியுள்ள அனைத்துத் தகுதிகளுக்கான ஆதாரங்கள் அடங்கிய அசல்
சான்றிதழ்களை (Original Certificates) ஸ்கேன் செய்து
ஆன்லைன் மூலம் பதிவேற்றம் செய்யும் முறையை தேர்வாணையம் முதல்முறையாக
அறிமுகப்படுத்துகிறது.
இந்த நடைமுறை வருகிற 23-ம் தேதி
(திங்கள்கிழமை) தொடங்கவிருக்கிற ஒருங்கிணைந்த குரூப்-2-ஏ
(நேர்முகத்தேர்வு அல்லாத பதவிகள்) தேர்வுக்கான சான்றிதழ் சரிபார்ப்பில் இருந்து
தொடங்குகிறது.
எனவே, குரூப்-2-ஏ சான்றிதழ் சரிபார்ப்புக்குத் தெரிவு
செய்யப்பட்டுள்ள விண்ணப்பதாரர்கள், மே 4-ம் தேதிக்குள் தங்களது அசல் சான்றிதழ்களைத்
தேர்வாணைய இணையதளத்தில் அரசு கேபிள் டிவி நிறுவனம் நடத்தும் அரசு
இ-சேவை மையங்கள் மூலமாக பதிவேற்றம் செய்ய வேண்டும்.
ஒரு சான்றிதழை ஸ்கேன் செய்து பதிவேற்றம் செய்ய ரூ.5 கட்டணம்
வசூலிக்கப்படும்.
இதனால் தகுதி மற்றும் தரவரிசையின் அடிப்படையில் கலந்தாய்வுக்கு
தெரிந்தெடுக்கப்படும் விண்ணப்பதாரர்கள் மட்டும் ஒருமுறை தேர்வாணைய அலுவலகத்துக்கு
அசல் சான்றிதழ்களுடன் நேரில் வந்தால் போதுமானது. இதனால், விண்ணப்பதாரர்களுக்கு
ஏற்படும் கால விரயம் மற்றும் பொருள் விரயம் வெகுவாகக் குறையும். இவ்வாறு அவர்
கூறியுள்ளார்.







